அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கிடைத்தும் தந்தையுடன் வாழமுடியாத இலங்கைத் தமிழ் சிறுவன்!
காலவரையறையின்றி தமது தந்தையை பிரிந்து நிற்கும் 5 வயதான இலங்கை தமிழ் சிறுவன் ஒருவன் குறித்து அவுஸ்திரேலிய செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அவுஸ்திரேலியாவில் நடைமுறையில் உள்ள ஏஎஸ்ஐஓ உளவு நிறுவன பாதுகாப்பு நடைமுறையின்படி, கடந்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் சார்த்தி என்ற இந்த சிறுவன் தமது தந்தையிடம் இருந்து பிரிக்கப்பட்டுள்ளதாக செய்தித்தாள்கள் குறிப்பிட்டுள்ளன.
இலங்கையில் இருந்து அகதிகளாக சிறுவனும் அவருடைய பெற்றோரும் அவுஸ்திரேலியாவுக்கு சென்றனர். அவர்களுக்கு கடந்த வருடம் பெப்ரவரி மாதம் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது.
இந்தநிலையில், சிறுவனும் அவரின் தாயாரும் தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
எனினும் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்பு என்ற சந்தேகத்தின்பேரில் சிறுவனின் தந்தை ( இலங்கையில் உள்ள உறவுகளின் பாதுகாப்பு கருதி பெயர் குறிப்பிடப்பிடபடவில்லை) விலாவூட்டில் உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
எனினும் அவருக்கு மேன்முறையீடு செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. குறிப்பிட்ட காலம், தந்தை விலாவூட்டில் தொழில் செய்வதாகவும் விரைவில் வீடு திரும்பிவிடுவார் என்று சிறுவனின் தாயார், சிறுவனுக்கு ஆறுதல் தெரிவித்து வந்தார்.
ஆனால், தற்போது தமது தந்தை தடுப்புக்காவலில் உள்ளமை தற்போது சிறுவனுக்கு தெரியவந்துள்ளது. எனினும் தமது தந்தையை ஏன் தடுத்து வைத்திருக்கிறார்கள் என்பது சிறுவனுக்கு இன்னும் தெரியாது.
தமது தந்தையை பார்ப்பதற்காக விலாவூட் தடுப்பு முகாமுக்கு செல்லும் போது தமது தந்தையை வீட்டுக்கு அழைத்து செல்லவே தாம் வந்துள்ளதாக சிறுவன் கூறுவதாக அவுஸ்திரேலிய செய்தித்தாள்கள் கூறுகின்றன.
எனினும் தந்தையை பார்த்து விட்டு, பிரியாவிடை பெற்றுச்செல்லும் 5 வயது சிறுவன், ஆழ்ந்த கவலையுடனேயே திரும்பி செல்கிறார். குறித்த சிறுவனின் தந்தையை போல மேலும் 46 பேர் விலாவூட் தடுப்பு முகாமில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
எனினும் அவர்களுக்கு இலங்கையில் பாதுகாப்பு பிரச்சினை இருப்பதால் அவர்களை திருப்பியனுப்ப முடியாது என்று சட்டத்தரணிகள் வாதிடுகின்றனர். அவர்களால் அவுஸ்திரேலியாவில் எவ்வித பாதுகாப்பு பிரச்சினைகளும் ஏற்படுத்தப்படாதபடியால் அவர்களை விடுதலைசெய்ய வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகளும் கோரி வருகின்றன.
இதேவேளை தேசிய பாதுகாப்பு பிரச்சினை என்பதால் அவுஸ்திரேலிய அரசாங்கமும் இந்த விடயத்தில் தலையிடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய செய்தித்தாள்கள் குறிப்பிட்டுள்ளன.