பிரான்ஸ் பாரிஸில் மிக எழுச்சிபூர்வமாக இடம்பெற்ற சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வு!
சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வு வெளிநாட்டவர்களின் நிகழ்வுடன் இணைந்து நேற்று செவ்வாய்க்கிழமை பிரான்சு பாரிஸ் நகரில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.பாரிஸ் நகரின் Denfert Rochereau பகுதியில் இருந்து ஆரம்பித்த பேரணி பாரிஸின் பிரதான வீதிகளின் ஊடாக நகர்ந்து Bastille நினைவுத் தூபிப் பகுதியைச் சென்றடைந்தது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்துகொண்டனர்.
பிற்பகல் 2 மணியளவில் பேரணி ஆரம்பிக்கப்பட்டது. பல்வேறு பட்ட இனங்களினதும் கட்சிகளினதும் ஒன்றிணைந்த அணிவகுப்புக்கு மத்தியில் தமிழ் மக்களின் பேரணியும் இடம்பெற்றது.
இம்முறை பிரான்சில் அதிபர் தேர்தல் நடைபெறும் காலமாகையால் பிரான்சு நாட்டின் கட்சிகள் பிரமாண்டமான முறையில் தமது நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டிலும் சிவப்பு மஞ்சள் கொடிகள் மற்றும் பலூன்கள் கட்டப்பட்டு தமிழீழத் தேசியத் தலைவரின் பிரமாண்டமான உருவப்படங்களைத் தாங்கி, ஊர்திகள் அனைவரையும் கவரும் வகையில் அமைக்கப் பட்டிருந்தது.
தமிழ் மக்களின் கலாசாரத்தைப் பறைசாற்றும் மேள வாத்தியங்கள் முன்னால் தமிழீழத் தேசிய கானங்களை முழங்க உணர்வெழுச்சியுடன் தமிழ் மக்களின் ஊர்திகள் வீதியில் அணிவகுத்துச் சென்றன.
அவற்றின் மத்தியில் பதாதைகளைத் தாங்கியநிலையில் கோசம் எழுப்பியவாறு மக்களும் அணிவகுத்துச் சென்றனர்.
நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தமது கைகளில் தமிழீழ தேசியக் கொடிகளையும் தமிழீழத் தேசியத் தலைவரது வர்ணப் படங்களையும் ஏந்தியவாறே காணப்பட்டனர். ஒலி பெருக்கிகளிலும் உணர்வுமிக்க தமிழீழ எழுச்சி கானங்கள் ஒலித்தன. பேரணியின் மத்தியில் போர்க் குற்றவாளி மகிந்தவின் உருவ பொம்மையும் கொண்டு செல்லப்பட்டது.
பிரான்ஸ் இளையோர் அமைப்பினர் இந்த மேதினத்தில் உற்சாகத்துடன் தமது பங்களிப்பைச் செய்திருந்தனர்.
பேரணியைப் பார்வையிட்ட வெளிநாட்டு மக்களுக்கு தமிழ் மக்களின் போராட்டம் பற்றிய பிரெஞ்சுமொழித் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
இரவு 8 மணியளவில் தமிழ் மக்களின் பேரணி Bastille நினைவுத் தூபிப் பகுதியைச் சென்றடைந்தது. அந்தவேளை, நினைவுத்தூபியின் உயரமான பகுதியில் ஏனைய நாட்டுக்கொடிகள் கட்சிக்கொடிகள் தாங்கியோரின் மத்தியில் ஒரு தமிழ் இளைஞன் தமிழீழத் தேசியக்கொடியைத் தாங்கியிருந்த காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
தொடர்ந்து அங்கு நினைவுக் கூட்டம் இடம்பெற்றது. சிறப்புரையை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் ஆசிரியர் திரு.சத்தியதாசன் அவர்கள் ஆற்றினார்.
அவர்தனது உரையில், மிகவும் கொடுங்கோன்மையான இராணுவ சர்வாதிகார ஆட்சி எம்மீது திணிக்கப்பட்டிருக்கின்றது. தமிழ் இனத்தின் தேசிய ஆன்மாவை ஆயுத பலாத்காரத்தின் மூலம் அடிமை கொள்வதே எதிரியின் திட்டம் என்ற தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைக்கு அமைவாக நாம் எழுச்சி கொள்ளவேண்டும்.
ஏனைய நாட்டவர்களுடன் நாம் இன்று இணைந்து 126 ஆவது மேதினத்தில் எழுச்சி கொண்டு நிற்கின்றோம்.
60 ஆண்டுகளாக தமிழ் மக்களை சிங்களவர் கொடுமைப் படுத்திவந்துள்ளனர். அதன் உச்சக்கட்டமாக முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களைப் படுகொலை செய்தனர். நாம் 1983 ஜூலைப் படுகொலையினையே அதி உச்சமாகக் கருதிவந்த நிலையில், இன்று முள்ளிவாய்க்கால் படுகொலை எமது மனத்தில் ஆறாத ரணமாக நிலைத்துவிட்டது. இதனைக் கருத்திற்கொண்டு வரும் மே 18 இல் முள்ளிவாய்க்கால் 3 ஆம் ஆண்டு நினைவில் அனைவரும் திரண்டு ஒருமித்துக் குரல் கொடுக்கவேண்டும் என்றார்.
தொடர்ந்து பிரான்சு தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திரு. திருச்சோதி அவர்கள், எமது தமிழ் மக்களின் போராட்டம் தொடர்பாகவும் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பாகவும் பிரெஞ்சுமொழியில் சுருக்கமாக விளக்கமளித்தார்.
நிகழ்வின் நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்தது. பாடல் நிறைவடையும் வரை தமிழ் மக்களுடன் இணைந்து பிரெஞ்சு மக்களும் கைகளைத் தட்டி உற்சாகமளித்தனர்.
இறுதியில் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் தொழிலாளர் தின நிகழ்வு நிறைவுற்றது.