மீள்குடியேற்றம் நிறைவுறும் வரை இலவச மின்னிணைப்பு வழங்கப்படுமாம்
மருதங்கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவின் கீழ் முழுமையான மீள்குடியேற்றம் நிறைவடையும் வரை இலவச மின்னிணைப்பை பெறுவதற்கு நடவடிக்கையெடுக்கப்படும் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உறுதிமொழி வழங்கியுள்ளார்.
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி உதவி அரச அதிபர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட முழுநாடும் ஒளிபெறுகின்றது தேசிய வேலைத்திட்டத்திற்கமைய மின்விநியோகத்தை இன்றைய தினம் தொடக்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு நாடளாவிய ரீதியில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் இப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளவும் இப்பகுதிகளில் மீளக்குடியமரக் கூடிய ஒரு அமைதிச் சூழலையும் ஏற்படுத்தித் தந்தமைக்காக ஜனாதிபதி அவர்களுக்கு எமது மக்கள் சாhபில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இப்பகுதி மக்களது பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு மின்சாரம் பெரும் உதவியாக அமையும். அதேநேரம் இதுவரையில் மின்சாரம் கிடைக்காத மக்களுக்கு மின்சாரம் கிடைப்பதற்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.
இம்மின்சாரம் மூலம் தொழிற்துறைகளில் மக்கள் முன்னேற்றம் காணலாம் என்பதுடன் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களும் முன்னெடுக்கக் கூடிய சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.
இப்பகுதியில் முழுமையான மீள்குடியேற்றம் இடம்பெறும் வரையில் இலவச மின்னிணைப்பை பெறுவதற்கு நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும் உறுதிமொழி வழங்கினார்.
நிகழ்வில் ஈ.பி.டி.பி.யின் வடமராட்சி இணைப்பாளர் சிறீரங்கேஸ்வரன் உரையாற்றும் போது 63 ஆண்டுகளுக்குப் பின்னர் வடமராட்சி கிழக்கு மருதங்கேணிப் பகுதிக்கு மின்சாரம் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இப்பகுதிக்கு அடிக்கடி பல்வேறு அரசியல் தலைவர்கள் வந்தாலும் மக்களின் பிரச்சினைகள் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்து வருபவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் என்றும் நீண்ட காலமாக அபிவிருத்தி செய்யப்படாத இப்பகுதி தற்போதுதான் அமைச்சரின் தலைமையின் கீழும் வழிகாட்டலுடனும் அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதாகவும் சுட்டிக் காட்டினார்.
முன்பதாக மின்விநியோகத் திட்டத்தை அமைச்சர் அவர்கள் சம்பிரதாயப்பூர்வமாகத் தொடக்கி வைத்ததுடன் பெயர்பலகையும் திரைநீக்கம் செய்து வைத்தார்.
ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்) தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் உரையாற்றுகையில் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் நாமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அதன் ஒரு கட்டமாக வரலாற்றில் முதல் தடவையாக இந்த பிரதேசத்திற்கு மின்சார விநியோகம் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் 650 இலட்சம் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்டது.
அதேபோன்று மக்களின் ஏனைய தேவைகளும் படிப்படியாக பூர்த்தி செய்யப்படும். குறிப்பாக ஏனைய மீள்குடியேறிய பிரதேசங்களில் போன்று இங்கும் மக்களுக்கு இலவச மின்னிணைப்பு மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
அபிவிருத்தியில் மின்சாரம் மிக மிக முக்கியமானது எனவே இனிவருங் காலங்களில் இப்பிரதேசத்தின் அபிவிருத்தி இதன்மூலம் விரைவுபடுத்தப்படும். மக்களும் மின்சாரத்தை பொருத்தமான வகையில் பயனுள்ள விதமாக பயன்படுத்தி தங்கள் வாழ்வில் ஒளிமயமானதாக மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இம் மின்விநியோகத் திட்டத்தின் மூலம் இப்பகுதியில் 250 வரையான குடும்பங்களும் அரச அரசசார்பற்ற நிறுவனங்களும் நன்மையடைய உள்ளன.
வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் வடமராட்சி கிழக்கிற்கென 65 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் முழுநாடும் ஒளிபெறுகின்றது திட்டத்திற்கு அமைய 12 மில்லியன் ரூபா செலவில் மருதங்கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவில் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் மருதங்கேணி உதவி அரசாங்க அதிபர் திருலிங்கநாதன் கிளிநொச்சி ஈ.பி.டி.பி. அமைப்பாளர் தவநாதன் மற்றும் துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.