தமிழருக்கு நியாயமான அரசியல் தீர்வு தேவை! ஹிலாரியிடம் விளக்குவார் கிருஷ்ணா
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை காணும் விடயத்தில் எடுக்கவுள்ள ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் குறித்து இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா விளக்கவுள்ளாரென இந்திய உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.சீனா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கான விஜயத்தின் பின் மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்து இந்தியாவிற்கு நேற்று வந்தடைந்த திருமதி ஹிலாரி கிளின்டன் இன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் முக்கிய பேச்சுகளை நடத்தவுள்ளார்.
இன்றைய சந்திப்பின் போது இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பிலான நிலைவரம் குறித்தும் ஹிலாரியிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா எடுத்துரைப்பாரென்று இந்திய உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டன.
இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வில் இந்தியா அக்கறையுடன் செயற்பட்டு வருவதும் உண்மையில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு மேற்கொண்ட நேரடி விஜயம் உட்பட்ட முக்கிய விடயங்கள் குறித்தும் கிருஷ்ணா, ஹிலாரியிடம் விளக்குவார்.
இலங்கை விடயத்தில் அமெரிக்காவுடன், அதன் ஆலோசனையின்படியே செயற்பட புதுடில்லி விரும்புகிறது என்று பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த இராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார்.