தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் யாழில் மாபெரும் கூட்டு மே தின நிகழ்வு
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு உலகநாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இலங்கையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் வரலாற்றில் முதற்தடவையாக ஒன்றிணைந்து கூட்டு மே தின நிகழ்வை யாழ்ப்பாணத்தில் இன்று நடத்தவுள்ளன.இலங்கையில் அரசு மேற்கொண்டு வரும் சிறுபான்மையினருக்கு எதிரான அடக்கு முறைகள் மற்றும் மக்கள் மீது சுமத்தும் பொருளாதார நெருக்கடிகள், உழைப்பாளர்கள் மீதான சுரண்டல்கள் என்பவற்றை சர்வதேசம் அறிந்துகொள்ளும் வகையில் இந்தக் கூட்டு மேதின நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வழமையாக பெரும் பான்மைக் கட்சிகள் மே தின நிகழ்வுகளை தலைநகரிலேயே நடத்துவது வழக்கம் இம்முறை அதற்கு மாறாக தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்தில் மே தின நிகழ்வுகளை தமிழ்த் தேசியக்கூட்டமைப்புடன் ஒன்றிணைந்து நடத்தவுள்ளன.
அரசின் அராஜகத்துக்கு எதிராக குரல் கொடுக்க எதிர்க்கட்சிகள் அனைத்தும் இன்று ஒன்று திரளவுள்ள கூட்டு மே தின நிகழ்வில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் அணி திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிரணிக் கட்சிகளின் கூட்டு மே தின நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டு மே தினத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி, நவசமாஜக் கட்சி, ஐக்கிய சோஷலிசக் கட்சி, நவ சிகல உறுமய ஆகியன கலந்து கொள்கின்றன.
கூட்டு மேதினப் பேரணி இன்று பிற்பகல் 1 மணிக்கு நல்லூர் கைலாசப்பிள்ளையார் கோயில் முன்றிலில் ஆரம்பமாகும். அங்கிருந்து கோவில் வீதி வழியாக பேரணி யாழ்ப்பாணம் குருநகர் சென்.றோக் விளையாட்டு மைதானத்தைச் சென்றடையும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில். அங்கு பொதுக் கூட்டம் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனநாய மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், நவ சமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண, ஐக்கிய சோஷலிசக் கட்சித் தலைவர் சிறிதுங்க ஜெசூரிய, நவசிகல உறுமைய கட்சித் தலைவர் சரத் மன்மேந்திரா ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழிற் சங்கத் தலைவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட எதிர்க்கட்சிகளின் முக்கியஸ்த்தர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் இதில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது.