புலிகளுக்கு கருவிகளை கொள்வனவு அமெரிக்காவில் 15 ஆண்டு சிறை
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு உபகரணக் கொள்வனவில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கனேடிய குடிமகனான றமணன் மயில்வாகனத்துக்கு 15 ஆண்டு கால சிறைத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என அமெரிக்க நீதித்துறை தீர்மானித்துள்ளது.
“சிறிலங்காவில் செயற்பட்ட பயங்கரவாத அமைப்பான தமிழ்ப் புலிகள் அமைப்பின் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கான உபகரணக் கொள்வனவில் றமணன் மயில்வாகனம் ஈடுபட முற்பட்டது மிகத் தீவிர குற்றம்“ என்று Brooklyn இல் உள்ள நியுயோர்க் நீதிமன்றில் தண்டனை வழங்கப்பட்ட அறிக்கையில் வழக்கறிஞர் லொறேற்றா லின்ஞ்ச் (Loretta Lynch) குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், தற்போது குற்றம்சாட்டப்பட்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள றமணன் மயில்வாகனம் என்பவர் அரசியல் செயற்பாடுகளில் பங்குபற்றவில்லை என்பதால், காலத்தை கருத்திற் கொண்டு இவருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையைக் குறைத்து இவரை விடுதலை செய்யுமாறு நீதிபதியிடம், வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இவருக்கான தண்டனைக் காலம் கடந்த வெள்ளியன்று அறிவிக்கப்பட்டது.
35 வயதான மயில்வாகனம் புலிகளுக்காக இரவு நோக்குக் கண்ணாடிகளைக் கொள்வனவு செய்ய முற்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இக் கொள்வனவில் ஈடுபட்ட சுரேஸ் சிறிஸ்கந்தராஜாவுக்கு உதவியாக இவர் செயற்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சுரேஸ் சிறிஸ்கந்தராஜா என்பவர் புலிகளின் கொள்வனவு முகவர் ஒருவருக்கு கணினி மற்றும் இலத்திரனியல், தொடர்பாடல் உபகரணங்களை கொள்வனவு செய்வதில் ஈடுபட்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் சிறிஸ்கந்தராஜா என்பவர், புலிகள் அமைப்புக்கு ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான ஏவுகணைகள் மற்றும் ஏ.கே 47 ரகத் துப்பாக்கிகள் போன்றவற்றை கொள்வனவு செய்ய முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பார்த்தீபன் நடராஜா என்பவருடன் இணைந்து தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக கனேடிய உயர்நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளார்.
இதனுடன் தொடர்புபட்ட வழக்கில் புலிகள் அமைப்புக்கான ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் ஏற்கனவே மூன்று கனேடியர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் சிறிலங்காவைச் சேர்ந்தவர்களாவர்.
குற்றம்சாட்டப்பட்ட ஆறு கனேடியர்களும் 2006 இல் கைது செய்யப்பட்டனர்.
அந்த நேரத்தில், விடுதலைப் புலிகள் அமைப்பு சிறிலங்காவில் தனிநாடு கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது.
இவர்கள் அறுவரும் விடுதலைப் புலிகளின் வலையமைப்புடன் தொடர்புபட்டிருந்தனர்.
இந்த வலையமைப்பு சட்டரீதியற்ற வகையில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டது. அதாவது நிதி சேகரித்தல், ஆயுதக் கொள்வனவு, ஆட்கடத்தல்கள், போதைப் பொருட் கடத்தல் போன்றவற்றில் ஈடுபட்டது’ என வழக்கறிஞர் லின்ஞ்ச் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவில் தமிழ்ப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட உள்நாட்டு யுத்தம் மே 2009 இல் முடிவு வந்தபோதிலும், தோற்கடிக்கப்பட்ட புலிகள் அமைப்புக்கு உதவி செய்த குற்றச்சாட்டின் பேரில் தண்டனை வழங்கப்பட்டுள்ள கனேடியர்கள் தொடர்பாக எந்தவொரு கருணையும் காட்டப்படவில்லை.
மயில்வாகனம் பெப்ரவரி 08 அன்று, புலிகள் அமைப்புக்கான உபகரணக் கொள்வனவில் ஈடுபட முயற்சித்தமை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டார்.
இவர் வொசிங்டனில் வேலை செய்த காலப்பகுதியிலேயே இவரால் சில குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதனாலேயே அமெரிக்க நீதித்துறை இவருக்கு 15 ஆண்டு கால சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என விரும்புகின்றது.
றமணன் மயில்வாகனத்தின் வழக்குத் தொடர்பாக கருணை காட்டுமாறு இவரது பதினொரு நண்பர்களும், குடும்பத்தவர்களும் நீதிபதியிடம் கோரியுள்ளனர்.
மே 04 இல் மயில்வாகனம் வீட்டுக்குத் திரும்பி வருவார் என இவரது சகோதரனான ராகவன் கதிரவேற்பிள்ளை நம்பிக்கை கொண்டுள்ளார்.
‘நாங்கள் மயில்hவாகனம் வீடு திரும்ப வேண்டும் என ஒவ்வொரு கணமும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்’ என அவர் மேலும் தெரிவித்தார்.
மயில்வாகனம் தனது தந்தையை இழந்த பின்னர் தனது குடும்பப் பாரத்தைச் சுமப்பதாக நீதிபதிக்கு வழங்கப்பட்ட கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர் தனது 12 ஆவது வயதில் கனடாவுக்கு குடிபெயர்ந்ததுடன், வோட்டர்லூ பல்கலைக்கழகத்தில் கல்விகற்றார்.
இவர் இங்கே கல்வி கற்கும் போது தமிழ் மாணவர் சங்கத்தின் பிரதித் தலைவராக பொறுப்பேற்றிருந்தார். இவர் இரு பட்டங்களைப் பெற்றுள்ளார்.
அத்துடன் தனது தாயாரையும், சகோதரர்களையும் கனடாவுக்கு கொண்டு வருமளவுக்கு வருமானத்தை பெற்றுக் கொண்டார்.
‘இந்த வழக்கின் முடிவால் இவரது வாழ்வு சிதைந்து போய்விட்டது. இவரை மிக விரைவில் வீட்டுக்கு அனுப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதன் மூலமே சிதைந்து போயுள்ள இவரது வாழ்வை மீண்டும் ஒன்று சேர்க்க முடியும்.
இவர் தனக்கும், தனது குடும்பத்தவர்களுக்கும், தனது சமூகத்துக்கும் நல்லதைச் செய்யக் கூடியளவுக்கு அவரை முன்னேற்றி விடவேண்டும்.
அதற்கான சாத்தியப்பாடான நகர்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என இவரது சட்டவாளரான ஜெறி பொங்க் குறிப்பிட்டுள்ளார்.